ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் ஒப்பிடக் கூடியவர் அல்ல என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை தொடர்பில் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அந்த கட்சியின் முன்னாள் உப தலைவர் கலாநிதி மஹேஷ் அத்தபத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலக்கு வைத்து சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதால், அவர் வெளியிட்ட இந்த கருத்து சம்பந்தமாக அவரை கைது செய்ய வேண்டும். பொன்சேகா தனது வாய் பேச்சு காரணமாகவே சகல சந்தர்ப்பங்களிலும் அழிவை சந்தித்து வருகிறார்.
வாயை அடக்க முடியாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக வெள்ளைக் கொடி வழக்கு தொடரப்பட்டது. சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் மக்கள் அவருக்கு எதிராக அணித்திரள வேண்டும்.
சிறையில் இருந்தவரை மன்னித்து விடுதலை செய்த ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறான அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியில் ரணிலுக்கும் சஜித் பிரேமதாசவுக்கு ஏற்பட்டுள்ள மோதலை பயன்படுத்தி அந்த கட்சியின் வாக்குகளை கவர்வதற்காக பொன்சேகா இப்படியான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
அத்துடன் பொன்சேகாவுக்கு எவ்விதமான அரசியல் அனுபவமும் கிடையாது. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்ற காரணத்தினாலேயே ஜனநாயகக் கட்சியில் இருந்து பலர் விலகினர் என்றார்.
0 comments :
Post a Comment