அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகரை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகள் அடங்கிய நகல் வரைபு, மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களினால் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகரப் பிரதேசங்களை 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 10 வருட காலப்பகுதிக்குள் மக்கள் விரும்பும் வகையில் கல்முனை “20 – 25” எனும் தொனிப்பொருளில் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தி செய்யும் வகையில் இவ்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லெகூன் வியு ஹோட்டலில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடிய போதே கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் இதனைக் கையளித்தார்.
சன நெரிசல் மிக்க கல்முனை மாநகர பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் குடியிருப்புப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு இப்பகுதியில் ஏழாயிரம் வீடுகளை அமைப்பதற்காக வயல் பிரதேசங்களை நிரப்புவதற்கான கோரிக்கை அடங்கிய முன்மொழிவும் இந்த வரைவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
0 comments :
Post a Comment