கூட்டமைப்புடன் அரசு பேச்சு நடத்த முன்வந்தால் ஐ.தே.க. பூரண ஆதரவு - கிரியெல்ல



நாட்டின் தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருமானால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு முழுமையான ஆதரவளிக்கும் என அக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையையடுத்து அரசாங்கம் உறுப்பு நாடுகளை சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி ஒரு போதும் பயனளிக்கப் போவதில்லை. எனவே அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச மட்டத்தில் இந்தளவு பிரச்சினைகள் வருவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம். யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் நாட்டின் தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதற்கு அவ்வப்போது ஏதாவது ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது.

நாட்டில் இன்று சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. சர்வாதிகாரம் தலைத்தூக்கியுள்ளது. சுயாதீனமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை இல்லாதொழிக்காமல் பிரச்சினைகள் தலைக்கு மேல் வந்ததும் தடுமாறுவதில் அர்த்தமில்லை.

நாட்டின் தேசிய பிரச்சிரனை தொடர்பாக அரசாங்கம் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அப்படியில்லாமல் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது பாரதூரமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். அந்த நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.

வடக்கில் தேர்தலை நடத்திய அரசு அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுயாதீன செயற்பாட்டிற்கு தடையாகவுள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக சர்வதேசத்தை தாறு மாறாக மேடைகளில் பேசுகிறது. பின்னர் தமது பிரதிநிதிகளை அனுப்பி உதவி கோருகிறது. இவற்றையெல்லாம் சர்வதேசம் அறியாமலி்ல்லை. ஆகையால் இவ்வாறான ஏமாற்று வேலைகளை முதலில் கைவிட வேண்டும்.

உள்நாட்டில் இரட்டைவேடம் போட்டு ஏமாற்றுவதை போல சர்வதேசத்தில் செய்ய முடியாது. அயல் நாடான இந்தியாவுடனும் இன்று பகைத்துக் கொண்டு தான் உள்ளது அரசாங்கம். இவ்வாறான நிலையில் மேற்குலக நாடுகள் எப்படி அரசுக்கு உதவப் போகிறது.

சர்வதேச நாடுகளின் உதவி எமக்கு தேவை. அவற்றை பெற்றுக் கொள்வதற்கு உரிய வேலைத்திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நெருங்கும் வேளையில் அதை எப்படி எதிர் கொள்வதென தடுமாறாமல் இருப்பதற்கு முறையானதும் தூர நோக்குடையதுமான நல்ல திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக கட்சி வேறுபாடின்றி கலந்துறையாடல்களை நடத்தி இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :