வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 206பி கிராம சேவகர் பிரிவில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை ஆலிம் வீதியில் வசித்து வந்த றம்ளார் பரிகாரியார் ஹாஜி ஆயிஸா பீபி (வயது (68) எனும் ஏழு (07) பிள்ளைகளின் தாய் தனிமையில் வசித்து வந்த சமயம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்கவின் வழிகாட்டலில் புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.தாஹா மற்றும் பண்டார ஆகியோர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹிம் சின்னலெப்பை (வயது –48) என்பவரும், ஓட்டமாவடியைச் சேர்ந்த செய்யது அப்துல் காதர் முஹம்மது இப்றாஹிம் (வயது – 49) என்பவர்களுமே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
இச்சந்தேக நபர்களிடம் நடாத்திய ஆரம்பக் கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாவது!
மரணித்த பெண் விறகு வியாபாரம் செய்யும் நோக்கில் சந்தேக நபரான முஹம்மது இப்றாஹிம் சின்னலெப்பை என்பரிடம் மொத்தமாக விறகு வாங்கித் தருமாறு பணம் கொடுத்ததாகவும் அவர் விறகு வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் குறித்த பெண் சந்தேக நபரான முஹம்மது இப்றாஹிம் சின்னலெப்பை என்பரின் வீட்டுக்குச் சென்று தனது பணத்தை எடுத்துக் கொண்டு ஏமாற்றுவதாக பேசிவிட்டு வந்ததாகவும் அதன் பின்னர் தான் எங்களது உதவியுடன் குறித்த பெண்னிடம் உள்ள நகைகளையும் பொருட்களையும் கொள்ளையிட நாங்கள் எல்லோரும் சென்றதாக மற்ற சந்தேக நபரான செய்யது அப்துல் காதர் முஹம்மது இப்றாஹிம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கொள்ளையிடும் நோக்கில் குறித்த பெண்னின் வீட்டுக் கூரை ஓடுகளை களட்டி அதனூடாக வீட்டுக்குள் நுளைந்து நகைகளை கொள்ளையிட்டு விட்டு குறித்த பெண்னையும் கொலை செய்து இருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மரணமடைந்த பெண் அணிந்திருந்த நகைகளை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திங்கட்கிழமை வாழைச்சேனை மாவட்;ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment