பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறுவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறைகொண்டு இவ்வருடம் சிறுவர் பாதுகாப்பு நலன்களுக்கென சுமார் 700 மில்லியன் ரூபாய் அதிகளவு நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்த சிறுவர் எழுச்சி விழாவில் சிறப்புரையாற்றுகையில் கூறினார்.
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பீ.எம்.எம்.மர்சூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்து பேசுகையில் .
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியையும்,அபிவிருத்தியையும் கட்டியெழுப்பிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெண் வன்முறைக்கெதிராகவும் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கையிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென்று அமைச்சர்களை பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 700 மில்லியன் ரூபா நிதியில் சிறுவர்களை பாதுகாத்தல் ,சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றி விழிப்பூட்டல் நடவடிக்கைகளில் அதிக கவனம் தற்போது செலுத்தப்பட்டுவருகின்றது.
சிறுவர் அமைச்சிற்கும் நான் பொறுப்பாக இருப்பதால் நாளாந்தம் 700 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமாக அமைச்சிற்கு கிடைத்து வருவதை அறிகின்றேன்.
பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு மாத்திரம் அனுப்பிவிட்டால் போதுமெனக்கருதக் கூடாது பிள்ளைகளின் ஏனைய விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் நாளுக்கு நாள் உலகம் அடைந்துவரும் மாற்றத்தில் பேஷ்புக்,வட்ஸ்அப்,எஸ்.எம்.எஸ்.,இன்டர்நெற் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்பட வழி ஏற்படுகின்றது குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க அதிக அக்கறை கொள்ளவேண்டும்.
சிறுவர் நலனில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி அதிக அக்கறையுடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதனையும் மாதர்களின் சமய எழுச்சிகளிலும் கவனம் செலுத்தி வருவதை கண்டு பாராட்டுகின்றேன் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment