ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊத்துச்சேனை வடமுனை கிராம மக்களின் போக்குவரத்து நலன் கருதி சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியால் ரிதிதென்ன இலங்கை போக்குவரத்து சாலையால் பஸ் சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயக் கிராமங்களான ஊத்துச்சேனை, வடமுனை, கல்லிச்சை போன்ற கிராம மக்கள் தமது தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் தமது விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும் வெலிக்கந்தை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு பஸ் போக்குவரத்து இன்மையால் பல்வேறு சிறமங்களை அனுபவித்து வந்தனர்.
போக்குவரத்துப் பிரச்சினையால் இப்பகுதி மக்கள் சிறமப்படுவதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இவ் பஸ்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பஸ்சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், ரிதிதென்ன இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் ஏ.எல்.ஜவ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் சேவை தினமும் காலை 6.30 மணிக்கு வாழைச்சேனையில் இருந்து ஊத்துச்சேனைக்கும், அங்கிருந்து காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பிற்கும், மட்டக்களப்பில் இருந்து 11.00 மணிக்கு ஊத்துச்சேனைக்கும், மீண்டும் பிற்பகல் ஊத்துச்சேனையில் இருந்து பிற்பகல் 02.30 மணிக்கு வாழைச்சேனைக்கும் இச் சேவை இடம் பெறும் என்றும் ரிதிதென்ன இலங்கை போக்குவரத்துச் சாலை முகாமையாளர் ஏ.எல்.ஜவ்பர் தெரிவித்தார்.