எம்.எம்.ஜபீர்,எஸ்.அஷ்ரப்கான்-
கூட்டுறவுத்துறையானது எமது பிராந்தியத்தில் இன்று நலிவடைந்து காணப்படுவது மிகவும் கவலையளிக்கும் இதேவேளை வட மாகாணத்தில் கூட்டுறவுத்துறையானது மக்கள் பங்களிப்பில் செயற்படுத்தப்படுகின்ற துறையாகவும் முன்னணி நிறுவனங்களை நடாத்தி சிறப்பானதாக செயற்படும் ஒரு துறையாக காணப்படுகின்றது.
இவ்வாறு நேற்று (14) கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கட்டிடத்திலுள்ள தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் பயிற்சி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வு அம்பாரை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி சபையின் தலைவர் இஸட்.டீ.ஏ.லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பகுறுதீன், கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, விஎஃபெக்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சுபாஜி திஸாநாயக்க, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பஸீர், கூட்டுறவு அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கூட்டுறவு அபிவிருத்தி சங்களின் பிரதிநிதிகள், மாணவர்களை என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் உரையாற்றுகையில், குறிப்பாக உலகத்தில் இந்தியாவின் கேரளா மானிலத்தை எடுத்துக் கொண்டால் உலகத்தில் முதல் சிறந்த கூட்டுறவு முறை அங்கு தான் காணப்படுன்றது. ஆனால் எங்களுடைய பிராந்தியத்தில் காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற முடிவுகளினால் கூட்டுறவுத்துறையின் வழற்சியில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
இதனை மாற்றியமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்கள் மக்களுடைய பங்களிப்புடனான கூட்டுறவுதுறையை அபிவிருத்தி செய்வதற்கான புதிய கொள்கைகளை உருவாக்கி வருகின்றனர்.
அந்த கொள்கை பிரகடணம் செயற்பாட்டிக்கு வருகின்ற போது நிச்சயமாக கூட்டுறவு துறைக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் இதற்கு அமைவாக பிரதமர் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு கடினமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் அவ்வாறு வருகின்ற போது குறிப்பாக எங்களுடை பிராந்தியத்தில் கூட்டுறவு துறையில் பாரிய மாற்றங்களை கொண்டு வரமுடியும்.
எமது இந்த பிராந்தியத்தில் கூட்டுறவுத்துறை ஊடாக கல்வியை வழங்குவதற்காக கணனி கூடத்தினை இன்று திறந்து வைத்துள்ளோம் இது உண்மையில் இந்த பிராந்தியத்திலுள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றத்தைஏற்படுத்துவார்கள் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையினால் கூட்டுறவு ஆற்றல் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் விஎஃபெக்ட் நிறுவனம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.