ஒக்டேபர் 23, 2015: அமெரிக்கத் தூதகரம் மற்றும் பொறியியலாளர்களின் அமெரிக்க இராணுவ குழுவும் அண்மையில் தெற்கு மற்றும் கிழக்கில் அனர்த்தத்திற்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு விஜயம் செய்து, உதவியளிப்பதற்கு சாத்தியமான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கண்டறிந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளையும்,ஹம்பாந்தோட்டையின் பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களையும் இந்த குழுவினர் பார்வையிட்டனர்.
தெற்கிற்கான விஜயத்தின் போது இந்தக் குழுவானது வீடமைப்பு மற்றும்
நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து, கலந்துரையாடினர்.
இலங்கையின் நெருக்கமான பங்காளர் என்ற வகையில், மக்கள் அனைவரும், விசேடமாக இயற்கை அனர்த்தங்கள் அல்லது மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் மருத்துவ மையங்களுக்கான அணுகும் வசதி உள்ளமையை உறுதி செய்வதற்கு நாடெங்கிலும் அமெரிக்கத் தூதரகம் பணியாற்றி வருகின்றது' என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் அவர்கள் குறிப்பிட்டார்.
2011ஆம் ஆண்டு முதல் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களில் 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் 1.78 பில்லியன்) பெறுமதியான நிர்மாணங்களை அமெரிக்கா பூர்த்தி செய்துள்ளது. அண்மையில், கிழக்கு மாகாணத்தில் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (இலங்கை ரூபாயில் 464 மில்லியன்), சம்பூர் பிராந்தியத்தின் பாடசாலைகளுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.
தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் மேலதிக உதவிகளுக்கான முன்னுரிமை இடங்களை தெரிவு செய்யும் நோக்குடன் இந்த விஜயம் அமைந்திருந்தது.