றிப்தி அலி,றிசாத் ஏ காதர்-
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ நகரினை மீளக்கட்டியொழுப்பிய இராணுவ வீரர்கள், விமானப் படையினர், கடற் படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அளுத்கம அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் ஓக்டோபர் 14ஆம் திகதி புதன்கிழமை மஃரிப் தொழுகையினை அடுத்து தர்கா நகர், சாவிய வீதியிலுள்ள தெருப் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் தலைவரான ஹுசைன் சாதீக் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி.ஜயலால், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல, சமயத் தலைவர்கள், பிரதேச பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ ஆகிய பிரதேசங்களை மீளக்கட்டியொழுப்பிய முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் என சுமார் 500 நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அளுத்கம கலவரத்தினை கலவரத்தினை அடுத்து மேற்குறிப்பிட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட அளுத்கம அபிவிருத்தி மன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பணியினை வெற்றிகரமாக நிறைவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.