கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்ற போது ரூபா 15 கோடி நஷ்டத்தில் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் தொழிற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக KPMG நிறுவனம் பணிக்கமர்த்தப்பட்டது.
அந்த நிறுவனம் சதொச நிறுவனத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பிழைகள், நிறுவனக்கட்டமைப்பில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. அந்த ஆய்வுகளின் சதொச நிறுவனத்தை புனர்நிர்மானம் செய்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
அமைச்சரின் துரித வழிகாட்டலுடனும் மற்றும் ஆலோசனைகளுடனும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் இந்த சதொசவை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் செயற்பாடுகளை நாம் துரிதகதியில் மேற்கொண்டுவருகின்றோம்.
நாடு முழுவதும் இயங்கிவரும் 300 கிளைகளை 500 ஆக அதிகரிப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
ரூபா 15 கோடி நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் நஷ்டத்தை நாம் படிப்படியாக குறைத்து முற்றிலும் இல்லாமலாக்கி தற்போது இலாபத்தை நோக்கி அந்த நிறுவனத்தி இட்டுச்செல்கின்றோம்.
”சதொச நிறுவனத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் மோசடிப் பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும்” பேரினவாத ஊடகமொன்று திட்டமிட்டு செய்திகளை பரப்பி வருகின்றது.
”இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது குறைந்த விலையில் தனியார் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக” நிதிக்குற்றப்புலனாய்வுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலேயே அமைச்சர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த இனவாத ஊடகம் செய்தி பரப்பியுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அமைச்சர் ரிஷாட் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களால் திட்டமிட்டு சோடிக்கப்பட்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும்.
சதொச நிறுவனத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொறுப்பேற்ற பின்னர் ஒரு கிலோகிராம் அரிசி கூட இறக்குமதி செய்யப்படவுமில்லை, ஒரு கிலோகிராம் அரிசி கூட தனியாருக்கு குறைந்த விலையில் கொடுக்கப்படவுமில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்யாகுமென உங்களுக்கு நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
அமைச்சரவையின் அனுமதியுடனும், வாழ்க்கைச்செலவை குறைப்பதற்கான அமைச்சர்கள் அடங்கிய உப குழுவின் கலந்தாய்வு, அங்கீகாரத்துடனேயே சதொசவின் அரிசி தொடர்பான விலை நிர்ணயம்,மொத்தவிற்பனை விலைகள், அரிசி தொடர்பிலான பரிவர்த்தனைகள் இடம்பெறுகின்றன என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் சதொச தொடர்பான அத்தனை விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படாமல் இரகசியமாக நடைபெற்றதை மாற்றி சகல விடயங்களும் பகிரங்கமாகவும் திறந்த செயற்பாடுகள் மூலமும் ஒளிவுமறைவின்றியே நடைபெறுகின்றன என்பதையும் நான் பொறுப்புடன் கூறுகிறேன். நாட்டு மக்களும் சதொசவின் செயற்பாடுகளில் பங்கு பற்றக் கூடிய நடைமுறைகளை நாம் பின்பற்றி வருகின்றோம் என்பதையும் நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன்.
ROHANTHA ATHUKORALA,
CHARMAN – LANKA SATHOSA