நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்த செய்க் சல்மான் பின் கலீபா அல் கலீபா (Principal Adviser & HRH the Prime Minister of Bahrain ) உடைய குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினை கொழும்பு கலதாரி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர் .
இக்கலந்துரையாடலின் போது முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வளங்கள் கொண்ட பாரிய திட்டங்கள் தொடர்பான விடயங்களை அவருக்கு எடுத்துரைத்தார், அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள மீன்பிடித்துறை, சுற்றுலாக் கைத்தொழில், விவசாயம் போன்ற துறைகளில் பாரிய முன்னேற்றத்தினையும், நவீன முறையில் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அதற்கு தேவையான முழு ஏற்பாடுகளையும் கிழக்கில் அமைத்துத் தருமாறு முதலமைச்சர் இக்கலந்துரையாடலின் போது கேட்டுக் கொண்டார்.
மேலும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக செய்க் சல்மான் பின் கலீபா அல் கலீபா கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவ் அழகிய நாட்டில் மிக வளமிக்க மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குவதால் பல்வேறு துறைகளிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை வளங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலுக்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர் அல்- ஹாஜ் ரவூப் ஹக்கீம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டனர்.