போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்ற இரகசியத்தை இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிாிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்றும் சரத் பொன்சேகா எடுத்துக்கூறினார்.
நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சரத் பொன்சேகா இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போர் முடிவுற்றதாக கூறப்படும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தார். அதனை அறிந்தும்கூட அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச போர் முடிவுற்றதாக அறிவித்துவிட்டார். ஆனால் அன்றைய தினம் நடந்ததை நானும் அறிவேன்.
புலிகளின் தலைவர் போரில் உயிரிழப்பதற்கு முன்னரே அன்றைய தினம் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
யுத்தத்தை வெற்றிகொண்ட பெருமையை அடைவதற்காக திட்டமிட்டபடி என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். நான் நாடு திரும்பியவுடன் என்னை அலரிமாளிகைக்கு அழைத்து முப்படைகளின் தளபதி என்ற பதவிலியிருந்து விலகுமாறும் அழுத்தம் பிரயோகித்தனர்.
அத்துடன் நாடு திரும்பிய மஹிந்த ராஜபக்ச யுத்த வெற்றியை தம்வசப்படுத்திக்கொள்ளும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்தமிட்டார்.
கோட்டாபய ராஜபக்சவும் யுத்த வெற்றியை தன்வசப்படுத்திக் கொள்ளும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகியவர் எவ்வாறு போர் வெற்றிக் கிரீடத்திற்கு உாிமை கொண்டாட முடியும் எனவும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.