இன்னும் மூன்று மாதங்களில் கடந்த ஆட்சியின் திருடர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறந்த சட்டத்தரணிகளை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நேற்றைய வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான, ஒன்றிணைந்த கூட்டு எதிhக்கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட ரணில்,
‘இந்த உலகத்திலேயே அதிபயங்கரமான திருட்டு கூட்டம் அங்கம் வகித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திதான்.
மூன்று மாத காலத்திற்குள் திருடர்கள் வெளிபடுத்தப்படுவார்கள். அவர்களின் திருட்டு முறைகள் வெளிப்படுத்தப்படும். சிறந்த சட்டத்தரணிகளை தெரிவுசெய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
மஹிந்த ராஜபக்ஷ ரெஜிமண்டில் இருந்து கொண்டு திருட்டு வேலைகளில் ஈடுபட்டவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் பக்கச்சார்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறினார்.