எப்.முபாரக்-
கிழக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்தை செவ்வனே கொண்டு நடத்துவதில் ஏற்படும் முட்டுக் கட்டைகள், குறிப்பாக ஆளுநர் தலையீடு குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை, முதலமைச்சர் மாநாட்டில் தான் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இது குறித்து ஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அத்துடன், இதுவரை காலமும் மாகாண நிர்வாகத்தில் குறிப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாங்கள் ஆளுநரின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட முழுமையான அறிக்கையொன்றைத் தயார் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த அறிக்கை மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவுகளில் ஆளுநரின் அநாவசியத் தலையீடு இடம்பெற்ற சந்தர்ப்பங்களையும் தாங்கள் ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தி அறிக்கை தயாரித்திருப்பதாகவும் முதலமைச்சர் விவரித்தார்.
32ஆவது, முதலமைச்சர்கள் மாநாடு, எதிர்வரும் 21ஆம் திகதி தென் மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தென் மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.சி. டிசொய்ஷா அறிவித்துள்ளார்.