சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வேண்டும் என கோரும் அவ்வூர் மக்கள் பாலமுனையில் நடைபெறவிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டை எதிர்த்து அதற்கு செல்லாமல் இருப்பதற்கும் அவ்வூரை சேர்ந்த அரசியல்வாதிகளும் செல்லாமல் தடை செய்வதற்கும் அம்மக்களுக்கு துணிவு வருமாயின் நிச்சயமாய் பிரதேச சபையை பெறலாம் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
சாய்ந்தமருது மக்களுக்கு தனி பிரதேச சபை தேவை என அம்மக்களில் பெரும்பாலானோர் விரும்பினால் அதனை வழங்கத்தான் வேண்டும் என முதலில் ஆதரவு தெரிவித்த ஒரே முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும்.
அத்துடன் 2010ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நாம் எமது கட்சிக்கு சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தால் இதற்கான அரசியல் போராட்டத்தை நாம் முன்னெடுக்க எமக்கு ஆணை வழங்கப்பட்டதாக அமையும் என்பதுடன் இது சாய்ந்தமருது மக்களின் ஜனநாயக ரீதியிலான தமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அரசு ஏற்கும் என நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெரிவித்திருந்தோம்.
ஆனாலும் சாய்ந்தமருது மக்கள் வழமை போன்று முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு வழமை போன்று ஏமாறி விட்டார்கள். ஏமாறுகிறோம் என தெரிந்து கொண்டே ஏமாறுபவனுக்கு பெயர் வேறாகும்.
ஆகவே சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தேவை என்றால் அவ்வூர் மக்கள் ஜனநாயக ரீதியில் தமது கருத்தை தெளிவு படுத்த தேர்தலை பயன்படுத்த முன் வரவேண்டும். அதனை தவற விட்டு விட்டு ஊடகங்களில் புலம்புவதால் பெரிதாக ஏதும் நடக்காது.
தற்போது இதற்கான அழுத்தத்தை கொடுக்கும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அரச உயர்மட்டம் கலந்து கொள்ளவுள்ள மு.கா வின் மாநாட்டை சாய்ந்தமருது மக்கள் பகிஷ்கரிப்பதுடன் தமதூர் அரசியல்வாதிகளும் அம்மாநாட்டுக்கு செல்லாமல் ஜனநாயக ரீதியில் தடுக்க முடிந்தால் அது அவ்வூர் மக்களின் தேவையை வலியுறுத்திக்காட்டியதாக முடியும்.