மு.கா வின் தேசியப்பட்டியல் ஆசனம் கட்சியின் வளர்ச்சிக்கான முதலீடாகவே அமையும் - அமைச்சர் ஹக்கீம்

அப்துல் கபூர் ஆதம்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் கட்சியின் வளர்ச்சிக்கான முதலீடாகவே அமையும் மாறாக தனிப்பட்டவர்களின் வளர்ச்சிக்கான முதலீடாக அது அமையாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

'சமகால அரசியலில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எத்திவைப்பதும் கட்சிப்போராளிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும்' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு எதிர்வரும் 19ம் திகதி அட்டாளைச்சேனை - பாலமுனையில் நடைபெறவுள்ளதனை முன்னிட்டு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி பிரதமர் வாழ்த்துரைகள் உட்பட கட்சித் தலைமையின் பேருரையும் உள்ளடங்கலாக மாநாட்டு தீர்மானங்களும் முன்மொழியப்படும்.

கட்சியின் ஒரு தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் பல பிரதேசங்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தீர்வு காணப்பட்டிருக்கின்றது. தேசியப்பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் வழங்குவதைத்தவிர வேறு எந்த மாற்று வழியும் கட்சியின் தலைமைக்கு இல்லை. ஏன்எனில் தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் கட்சியின் வளர்ச்சிக்கான முதலீடாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

மாவட்ட தொகுதி பிரதேச ரீதியான வேண்டுகோளுக்கிணங்கவும் தலைமை தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியிற்கு அமையவும் அவை நடந்தேறும். சுழற்சி முறையில் அம்பாறை மாவட்டத்திற்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற இப்பிரதேசத்து சமூகங்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இம் மாநாட்டு நிகழ்வினை அலங்கரிக்கவுள்ளன. இம் மாநாட்டிற்கு சுமார் 25000 கட்சிப்போராளிகளினை ஒன்று திரட்டி கட்சியின் ஒற்றுமையினை பறைசாற்றுவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கட்சியின் தலைமையோ அல்லது கட்சியோ கட்சியின் செயலாளரையோ தவிசாளரையோ புறக்கணித்து இம்மாநாட்டினை நடாத்தவில்லை. கட்சியின் சகல குழுக்களிலும் அவர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களது வேலைப்பளு காரணமாக அவர்களால் சில விடயங்களில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். இது இவ்வியக்கத்தின் சமகால அரசியல் வகிபாகம் குறித்த முக்கிய நிகழ்வு ஆகும்.

இம் மாநாட்டினை நடாத்துவதன் மூலம் கட்சியின் ஆதரவினை அதிகரித்து கொள்வதனை விட மாற்றுத்தரப்பினருக்கு கட்சிப்போராளிகளினது பற்றுறுதியினை வெளிக்கொணர்கின்ற ஒரு நிகழ்வாக இது அமையும். பாலமுனையில் கட்சியின் மாநாடு நடைபெறுவதானது கட்சித் தலைமை தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரமே ஒழிய வேறு எந்தவிதமான விசேடத்துவமுமில்லை. 

அட்டாளைச்சேனைப் - பாலமுனை பிரதேசம் கட்சிக்கு பெரும் ஆதரவினை தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கின்ற அதேவேளை பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரதேச சபையின் ஆட்சியினை தக்கவைத்து கொள்கின்ற ஒரு பிரதேசம் என்கின்ற அடிப்டையில் தலைமை வாக்குறுதியளித்திருந்தது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கால வரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதானது மீள் எல்லை நிர்ணயம் சம்மந்தமான சரியான அறிக்கை வெளிவருவதில் உள்ள தாமதமே ஒழிய வேறொன்னும் இல்லை. கடந்த ஆட்சியினிலே மேற்கொள்ளப்பட்ட பிழையான எல்லை நிர்ணயமானது பல சர்ச்சைகளை சிறுபான்மை கட்சிகளுக்கடையே குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் சிபாரிசுகள் கணக்கில் எடுக்கப்பட வில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

கட்சியின் இம்மாநாட்டினை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கட்சி நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூஸைன் இலங்கை வந்த போது கட்சி தலைமை வெளிநாட்டில் இருந்ததற்காக எமது கட்சி முஸ்லிம் சமூகம் குறித்து தீர்வு தொடர்பில் எதுவும் செய்யவில்லை என்பது தவறானது. 

கட்சியின் ஸ்தாபத் தலைவர் மாஹூம் எம். ஏச்.எம் அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பாக ஒரு தெளிவினை ஏற்படுத்துகின்ற விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்கின்றது. இதுவரை வெளிவந்த அறிக்கைகளின் படி உயரத்தினை அடையாளம் காட்டுகின்ற இயந்திரத்தின் கோளாறுதான் விபத்திற்கு காரணம் என வான்படை அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மூடிமறைப்பு வேலைகளைச் செய்யாமல் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளும். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டுக்கு தேவையான கட்சியின் பணிகளினை மிக தாராளமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றி வருகிறார்கள். இவ் நல்லாட்சி அரசு அபிவிருத்தியில் அசமந்தப்போக்கினை கொண்டுள்ளது என்பது யதார்த்தமற்றது. 

ஏன்எனில் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டு 08 மாதங்களே கடந்துள்ள நிலையில் கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் உட்பட பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளன. அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 06ம் திகதி தொடக்கம் 09 வரை பிரதமர் தலைமையிலான சீனப்பயணத்தில் நானும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தாhர்.

கிழக்கு மாகாணத்திற்கென விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒலுவில் பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை சுற்றுலாத்துறை விவசாய நீர்பாசன திட்டங்கள் பாதைகள் பாலங்கள் என பல அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும்.

வட கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படுகின்ற பொழுது முஸலிம்களுக்கான தனிமாகாணம் தரப்பட வேண்டும். இதுவிடயத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் வெறும் பிரசித்தத்;திற்காக மட்டும் பேசுவதை தவிர்த்து பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளவேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் வட கிழக்கு இணைப்பினை பாராளுமன்ற பிரேரணை ஒன்றின் மூலம் தான் நடைமுறைப்படுத்த முடியும். 

அதனது பின்புலம் தெரியாமல் அறிக்கை விடுவது தேவையற்ற புரளியினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தினிலே இல்லாமல் அரசியல் யாப்பினை திருத்த முடியாது. மேலும் சில விடயங்களுக்கு அதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்ககெடுப்பும் நடாத்த வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு தொடர்பாக காத்திரமான பங்களிப்புக்களை சர்வ கட்சி மாநாட்டிலும் nனைய இடங்களிலும் தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு எட்டப்படுகின்ற போது அது இரவோடு இரவாக நடந்தேறுகின்ற ஒரு விடயமல்ல மாறாக அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தொருமைப்பாட்டினை அது விடயத்தில் அடைய வேண்டும். 

தமிழ் மக்களுக்கான தீர்வினை தமிழ் தரப்புக்கள் முன்வைக்கின்ற போது அதில் தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எதுவும் நடைபெற முடியாது. 1957 திருமலை மாநாட்டிலும் 1977 பாராளுமன்ற தேர்தலிலும் செல்வநாயகத்;தின் தீர்வினிலும் முஸ்லிம்களுக்கு தனிமாகாணம் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததனை நாம் மறக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த தீர்விற்கும் பொறுப்புள்ள தமிழ் தேசியத் தலைமை ஒருபொழுதும் இடமளிக்காது. நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக எமது கட்சி பல முன்னெடுப்புக்களை செய்திருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் சவுதி அரேபிய அரசுக்கும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தெரியப்படுத்தப்பட்டு அதற்கான தீர்வு இன்ஷா அல்லாஹ் விரைவில் கிடைக்கும் என நம்புகின்றேன். 

இம்மாநாட்டிற்கு எமது கட்சி சகல கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் என்பதோடு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்குகின்ற விடயத்தில் தேர்தலுக்கான ஒரு கூட்டமைப்பாக அது அமையாமல் இருப்பதோடு முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள் தனிக்கட்சியமைத்தது எல்லாம் அமைச்சுப் பதவி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காகவே அன்றி வேறொன்றுக்காகவுமில்லை. எனவே கூட்டமைப்பு உருவாக்கம் கட்சி அமைக்கின்ற அரசு எத்தனை அமைச்சுப் பதவிகளை கூட்டமைப்புக்கு வழங்கும் என்பதினிலயே தங்கியுள்ளது என தெரிவித்ததார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -