ஹாசிப் யாஸீன்-
எதிர்வரும் 19ம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டினை முன்னிட்டு மாநாட்டுக்கான இளைஞர் தொண்டர் அணியினருக்கும் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்களுக்குமிடையிலான ஒன்றுகூடல் நாளை சனிக்கிழமை (12) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பிரதேச ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வையும், ஏற்பாடுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் அம்பாறை மாவட்டத்தின் மூளை முடுக்கெல்லாம் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மாவட்டத்திலுள்ள இளைஞர்களை கொண்டு இளைஞர் தொண்டர் அணி அன்றைய தினம் அமைக்கப்படவுள்ளதுடன் இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இளைஞர் தொண்டர் அணியினருக்கு மாநாடு சம்பந்தமாக கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீமினால் அறிவுறுத்தப்படவுள்ளதுடன் தொண்டர் அணியிருக்கான ரீ-சேர்ட், தொப்பி என்பன தலைவரினால் வழங்கி வைக்கப்படவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் இளைஞர் தொண்டர் அணியினருக்கும் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்குமிடையில் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெறவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கட்சியின் மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்படும் இந்த இளைஞர் தொண்டர் அணி தொடர்ச்சியாக கட்சியின் நடவடிக்கைகளோடு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இவர்கள் இயங்கவுள்ளதுடன் இத்தொண்டர் அணியிலுள்ள இளைஞர்களுக்கு கட்சியினால் வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கான சந்தர்ப்பங்களின் போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.