இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பெல்ஜியத்தில் வழமைபோல் ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் பின்னரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற விமான நிலையத்தின் மீதான தாக்குதல்களை அடுத்து பெல்ஜியம் முஸ்லிம்கள் அச்சத்திற்கும், பீதிக்கும் மத்தியில் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல்களுக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு முஸ்லிம் அமைப்புக்கள், யெமன், ஈராக், சிரியா, லிபியா, லெபனான், பாக்கிஸ்தான், மாலி, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒத்ததாகவே இந்த தாக்குதலும் அமைந்துள்ளது என சுட்டிகாட்டியுள்ளதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தாம் முழுமையாக ஒத்துழைக்க தயார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.