படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று கையளிக்கப்படவுள்ளது.
வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி இதனை அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வித்தியாவின் பெற்றோர்களிடம் கையளிக்க உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வித்தியாவின் பெற்றோர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் விருப்பம் தெரிவித்த பிரதேசமான வவுனியாவிலேயே புதிதாக வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரின் ஒத்துழைப்புடன் வவுனியா கொக்எலிய பிரதேசத்தில் படைவீரர்களுக்கென 40 பேர்ச்சர்ஸ் வீதம் 80 காணி துண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “நல்லிணக்க படைவீரர் கிராமம்” தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.