மும்பையில் வீட்டுப்பாடம் எழுதாத இரண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வகுப்பறையின் வெளியே இரண்டு மாணவர்கள் நிர்வாணமாக நிற்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
அதில் ஒரு சிறுவன் நிர்வாணநிலையிலும், மற்றொரு சிறுவன் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருப்பது போலவும் உள்ளது.
அதோடு, இந்த மாணவர்கள் வெளியே நின்று கொண்டிருக்கும் போது, மேலும் சில மாணவ – மாணவிகள் வகுப்பின் உள்ளே செல்வதும், பின்னர் வெளியே வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை யார் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர் என்பது குறித்து விவரங்கள் இல்லை. ஆனால், இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தனியார் சமூக சேவை அமைப்பு ஒன்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இது பற்றி அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் தனஞ்செய் குல்கர்னி விசாரணை நடத்த மால்வாணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவம் மும்பை மலாடு மேற்கு மால்வாணி கேட் நம்பர் 5-ம் நம்பர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பயிற்சி வகுப்பில் நடந்தது தெரியவந்தது.
உடனடியாக சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்குச் சென்ற போலீசார், அங்கு விசாரணை நடத்தினர். அதில், வீட்டு பாடத்தை எழுதாததால் 2 சிறுவர்களையும் தண்டிக்கும் வகையில் ஆசிரியர்கள் கணேஷ்நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் ஆகியோர், அவர்களை வகுப்பின் வெளியே நிர்வாணமாக நிற்கவைத்தது உறுதியானது.
இதையடுத்து அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.