டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
பன்னூல் ஆசிரியர் புன்னியாமீனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி
ஆரவாரமின்றியும், அமைதியாகவும் இலங்கையில் எழுத்து துறையிலும், நூல் ஆக்கத்திலும், ஊடகங்களிலும் பாரிய பங்களிப்பை செய்த புன்னியாமீனின் மறைவு பெரிதும் கவலையளிப்பதாக அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியீட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிலிருந்து நாடு திரும்பியதும் வெள்ளிக்கிழமை (11) காலை அமைச்சர் ஹக்கீம் வெளியீட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நண்;பர் புன்னியாமீன் கின்னஸ் சாதனைக்குரியவராக கருதப்படக் கூடியவர். அந்தளவுக்கு எழுத்து துறையில் அவரது பங்களிப்பு இருந்திக்கின்றது. விக்கிபீடியாவில் கூட அவர் தனியான இடம் பிடித்திருந்தார்.
புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கு புறப்பட்டு செல்லும் வரை ஓயாது, ஒழியாது எழுதிக் கொண்டிருந்த அவர், நாடு திரும்ப தயாராகி கொண்டிருந்தபோது நோய்வாய்ப்பட்டு அரபு நாடுகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் அண்மையில் தான் நாடு திரும்பியிருந்தார்.
அவர் இறுதியாக எழுதிக்கொண்டிருந்தவையும், தொடர்ந்து எழுதுவதற்கு எண்ணியிருந்தமையும் முழுமையடையாமலும்;, கைக்கூடாமலும் போயுள்ள நிலையில், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி அவரது உலக வாழ்வு முற்றுப்பெற்றுவிட்டது.
இஸ்லாத்தை அடியொட்டி இலங்கையில் எழுத்து துறையில் தடம் பதித்தோர் வரிசையில் புன்னியாமீன் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்.
அல்லாஹுத் தஆலா அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாஹ்
ற.ஹசான்-
பேனா எனும் ஆயுதத்தினால் சமூகப் பணி ஆற்றிய சகோதரர் பீ.எம். புன்னியாமீனின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான புன்னியாமீன் காலமானதையொட்டி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பன் நூலாசிரியரான உடதலவின்னவைச் சேர்ந்த புன்னியாமீன் ஆசிரியரின் ஜனாஸா செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
அவரின் மறைவால் துயருற்றுள்ள அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிரேஷ்ட இலக்கியவாதியான புன்னியாமீன் 150க்கும் மேற்பட்ட அழியா சொத்துகளான புத்தகங்களை எமக்குத் தந்தவர். அவரின் சேவையை இறைவன் பொருத்திக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பேனாவை ஆயுதமாக ஏந்திய அவர், தன் பணியை சரிவர மேற்கொண்டு இறையடி சேர்ந்துள்ளார். அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.