கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படுவதற்கான தீர்வு கிட்டும் என மு.கா தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்றைய தினம் (12) ஒலுவிலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றிய ஊடகவியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கூறுகையில் :
நுரைச்சோலை வீட்டுத்திட்டம் சம்பந்தமாக தொடர்தேர்ச்சியாக பேசி வருகின்றோம். ஏனென்றால் இந்த வீட்டுத்திட்டத்தில் இருக்கும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இவைகளை மீளவும் நீதிமன்றத்தீர்ப்பின் மூலமே சீர்செய்ய முடியும். அது தவிர வேறு வகையினால் அவற்றுக்கான தீர்வினை எட்டுவது கஷ்டமானதாகும். இதுதவிர இந்த வீட்டுத்திட்டம் சம்பந்தமாக சவுதி அராபிய தூதுக்குழுவினருடனும், வெளிநாட்டு அமைப்புக்களுடன் பேசிய போது இதற்கு மேலதிகமாக சவுதி அரசாங்கம் உதவ தயாராக இருக்கின்றது.
மேலும் இந்த விடயம் சம்பந்தமாக சவுதி செஞ்சிலுவைச்சங்கம் சவுதி அரசாங்கத்திற்குக் கூட முறைப்பாடொன்றை செய்திருக்கிறது. எனவே இதன் மூலம் விரைவில் நுரைச்சோலை வீட்டுத்திட்டதினை மக்களிடம் கையளிப்பதற்கான தீர்வு கிட்டும் என்றார்.