பி.எம்.எம்.எ.காதர்-
முன்னாள் அமைச்சர் ஏ. ஆர்.மன்சூருக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம் கௌரவ.கலாநிதிப் பட்டம் வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மிகவும் பாராட்டுக்குரியது என மருதம் கலைக்கூடல் மன்றம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் விவகார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
'மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தனது அரசியல் அதிகார பலத்தினால் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை ஸ்தாபித்த போதிலும் அவரது மறைவுக்குப் பின்னர் அதிகாரப் பதவிகளை அலங்கரித்த எவரும் இப்பல்கலையின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பு எதனையும் செய்திருக்கவில்லை.
இந்நிலையில்தான் முன்னாள் அமைச்சர் மன்சூர்இ குவைத் தூதுவராக பதவி வகித்த காலத்தில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பாரிய அபிவிருத்திகளுக்காக பெரும்தொகை நிதியை பெற்றுக் கொடுத்திருந்தார். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் கலங்கரை விளக்காகத் திகழ்கின்ற இப்பல்கலைக் கழகத்தை ஏனைய பல்கலைக் கழகங்களுக்கு நிகரான வசதிகள் நிறைந்த கல்விக்கூடமாக உயர்த்துவதற்கு அவர் கால்கோளாக இருந்துள்ளார்.
தனது குறுகிய கால தூதுவர் பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட இந்நடவடிக்கை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும். அது எதிர்கால சந்ததியினருக்கு சரித்திரம் சொல்வதற்கு மாத்திரமன்றி பதவிகளை அலங்கரிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாடம் கற்பதற்கும் சான்றாக அமையும் எனலாம்.
முன்னாள் அமைச்சர் மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் கல்முனைத் தொகுதியில் அபிவிருத்திப் புரட்சியை செய்து காட்டினார். அவரது காலத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அவரது பதவிக் காலம் கல்முனைத் தொகுதியின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.
தனது சுய அரசியல் இலாபங்களுக்காக அவர் இனவாதம் பேசவுமில்லை,பிரதேச வாதம் பேசவுமில்லை. கல்முனைத் தொகுதியில் ஒரு தூய்மையான, நேர்மையான அரசியலை அவர் செய்து காட்டியிருந்தார். அந்த உயர்ந்த மனிதரின் சேவைகளை நினைத்து கல்முனைத் தொகுதி மக்கள் இன்றும் ஏங்கித் தவிக்கின்றனர்.
இத்ததகைய ஒரு கனவான் அரசியல்வாதிக்கு கௌரவம் அளிப்பதன் மூலம் அவர் பெருமையடைவதை விட கல்முனைத் தொகுதியும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமுமே பெருமையுடன் மகிழ்ச்சியடைகிறது என்பதில் சந்தேகம் கிடையாது' என குறிப்பிட்டுள்ளார்.