விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியானது, தனி நபர் ஒருவர் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிலரின் மூலமாகவோ மாத்திரம் கிடைத்த ஒன்றல்ல என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ரக்னா லங்கா மற்றும் எவன்கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி விஷேட விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகள்:
தனது இராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன, இராணுவத் தலைமையகத்துக்குள் நுழைந்து இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தும் அளவுக்கு பலவீனமடைந்திருந்த பாதுகாப்பை சரி செய்ய முடியாமல் போன ஒருவர் நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டுவந்தேன் என கூறுவதை என்னவென்று கூறுவது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தத்தைக் கொண்டுவருவதற்கு விமானப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை போன்ற அமைப்புக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினர். இவற்றை மறந்து எப்படி ஒருவர் மாத்திரம் இதனைச் செய்தார் என்று கூறுவது.
2000 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியாமல் போன ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், அமைச்சும் கிடைக்கப் பெற்றால், இவ்வாறு தான் தங்களுக்கு உதவியவர்களுக்கு விசுவாசத்துக்காக எதையும் கூறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்