எப்.முபாரக்-
திருகோணமலை-ஹொரபொத்தானை பிரதான வீதியில் செவ்வாய்கிழமை (22)காலை லொறியுடன் மோதுண்டு வீதியில் உயிரிழந்த நிலையில் கிடந்த எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர் மூதூர்-கட்டைப்பறிச்சான் பகுதியைச்சேர்ந்த பீ.ஸ்ரீரமணன் (31 வயது) எனவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
வன பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் குறித்த நபர் வவுனியா செல்வதற்காக வீட்டிலிருந்து அதிகாலை புறப்பட்டுள்ளதாகவும் 10ஆம் கட்டைப்பகுதியில் லொறியுடன் மோதி உயிரிழந்து கிடந்த எருமை மாட்டின் மேல் சைக்கிள் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான நபரை மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.