சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கையின் பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தஜுதீனின் உயிரிழப்பு சம்பந்தமான விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு வந்தபோது, அரசதரப்பு சட்டத்தரணி டிலான் ரத்ணாயக்க, இந்த விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றைக் கோரியிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாலையோர சிசிடீவி காட்சிகள் பரிசோதனை செய்யப்படுகின்ற போதும் அந்த பரிசோதனை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.
நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்த மேலதிக நீதவான், குறித்த வழக்கை மே மாதம் 12ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இந்த பரிசோதனைகளின் முன்னேற்றங்களை வெளிக்காட்டும் அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்பிக்குமாறும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.