சலீம் றமீஸ்-
ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டத்தில் நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் அவசர தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் முன் வைக்கப்படவுள்ளது.
தேசிய பாடசாலைகளிலும், மாகாணப் பாடசாலைகளிலும் பல துறைகளுக்கான ஐயாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டத்தில் நீண்ட காலமாக வெற்றிடமாகவுள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினைக் கோரும் அவசர தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது...
தேசிய பாடசாலைகளிலும், மாகாணப் பாடசாலைகளிலும் பல துறைகளுக்கு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக வெற்றிடமாகவுள்ள 1000க்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படாமல் உள்ளன. மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையினால் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் பாடத்தினை கற்க முடியாமல் பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். நீண்டகால இடைவெளிக்கு பிறகு கடந்த அரசாங்கத்தில் 151 பேருக்கு பாடசாலைகளில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
எனவே, வழங்கப்படவுள்ள ஐயாயிரம் ஆசிரியர் நியமனங்களில் மௌலவி ஆசிரியர் நியமனங்களையும் வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்குமாறு கோரியே இந்த அவசர பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் 2016.03.15ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளது.