ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய மாநாட்டின் மக்கள் வெள்ளத்தைக் கண்டு தாங்க முடியாமல் கூச்சலிட ஆரம்பித்துள்ளார்கள் - யஹியாகான்
கடந்த சனிக்கிழமை பாலமுனையில் நடை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தைக் கண்டு ஒரு சிலருக்கு நிற்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை. அதையிட்டு அவர்கள் கதைகளைக்கட்டி அங்குமிங்கும் கொக்கரித்துத் திரிகின்றார்கள். இவர்களுடைய கொக்கரிப்புகளுக்கு மக்கள் இந்த தேசிய மாநாடு மூலம் பதில் கொடுத்துள்ளார்கள்.
இன்று ஒருத்தர் நான் கட்சி ஒன்று வைத்திருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு சில ஊடகங்களிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாட்டில் அநாச்சாரங்கள் நடந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இவரை அநாச்சாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத ஒருவராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
இது பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாடு. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாட்டுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி அவர்களும் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களும் கலந்து கொண்டதோடு எமது கட்சி உறுப்பினர்களாக மாற்று சமூகத்தினரும் இருக்கின்றார்கள்.
அப்படியிருக்கின்ற போது நாம் வாழ்கின்ற இலங்கையில் மாற்று சமூகத்தின் கலாச்சார நிகழ்வுகளைக் காண்பித்தால் அதில் என்ன தப்பு இருக்கின்றது?
மாற்று மதத்தினரின் கலாச்சாரத்தைக் காட்டுவதில் எங்களுக்கு எந்தவொரு தப்பும் தெரியவில்லை. ஆனால் தப்பென்று கூச்சலிடும் ஒரு சிலர் கொடுக்கின்ற கூலிக்கு கொக்கரிப்பவர்கள் போலவே எமக்கும் தெரிகின்றார்கள்; மக்களுக்கும் தெரிகின்றார்கள்.
நான் மிகவும் தெளிவாக சொல்வது என்னவென்றால் இந்த பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவருக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் இது பிழையான அறிக்கை என்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய உயர்பீட உறுப்பனரும் கணக்குகளுக்கான பணிப்பாளருமான அல்-ஹாஜ் யு.ஊ யஹியாகான் அவருடைய ஊடக அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.