அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர பிரதான பஸ் நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்காக 40 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள கிழக்கு மாகாண சபை முன்வந்திருப்பதாக மாநகர முதல்வர் - சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோதே அவர் இந்த தகவலை அறிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
"எமது கல்முனை பிரதான பஸ் நிலையத்துடன் பயணிகளின் நன்மை கருதி தனியார் பஸ் சேவையும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருப்பதால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு அசௌகரியங்களும் காணப்படுகின்றன.
ஆகையினால் அந்த பஸ் நிலைய வளாகத்தை விஸ்தரிப்பு செய்து அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளதுள்ளது. அதற்காக எனது வேண்டுகோளை ஏற்று கிழக்கு மாகாண சபை 40 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. அத்திட்டத்தை மிகவும் நேர்த்தியாக முன்னெடுப்பதற்கு உறுப்பினர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். அது தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் செயலகத்தில் நடைபெறும்" என்றார்.