அபு அலா –
எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட்ட நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும். அதற்காக எந்த செலவினங்களும் செலவிடத்தேவையில்லை என அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.எம்.எப்.பர்வீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் இன்று (27) இடம்பெற்ற தொற்றா நோய் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருபவையாகும்.
இன்று சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள் செய்கின்றன.
இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்தக் காரணங்களால் நோய் ஏற்படுகிறது அதனால் நாம் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகளை தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை அதற்காக ஒதுக்கி செய்துவருவதன் மூலம் எம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
ஆனால், டெட்டன்னஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஊசி போட்டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால்கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக் காப்பாற்றிவிடும். கக்குவான், மஞ்சள்காமாலை என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.