எப்.முபாரக்-
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று புதன்கிழமை (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனீஸ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவகத்துக்கு முன்பாக முன்னெடுத்து வருகின்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
செவ்வாய்கிழமை (26)கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி தம்மை சந்தித்தும் தீர்க்கமான முடிவொன்றினை வழங்கவில்யெனவும், தாங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இவ்விடயத்தினை எதிர்கட்சித் தலைவருக்கும் இவ்விடயம் சம்பந்தமாக தெரியப்படுத்துவதோடு, மத்திய அரசாங்கத்தின் கல்வியமைச்சருக்கும் அறிவித்து தாங்களுக்கு உரிய முடிவினை பெற்றுத்தருவதாக வாக்குறிதியளித்ததோடு சுழற்சி முறையிலான ஆர்ப்பாட்டத்தினை கைவிடும்மாறு கல்வியமைச்சர் கேட்டதாகவும் தங்களுக்கு சரியான முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லையெனவும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 250 உறுப்பினர்களும் மட்டக்களப்பைச் சேர்ந்த 100 உறுப்பினர்களும் அம்பாறையைச் சேர்ந்த 115 உறுப்பினர்களுமாக மொத்தம் 465 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும், மேற்படி சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில், 'யுத்தம் மற்றும் சுனாமி இடம்பெற்ற கஷ்டமான காலப்பகுதியில் சேவையாற்றிய கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் கிடைக்காமை அவர்களுக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கிழக்கு மாகாண ஆளுநரிடம் இரண்டு தடவைகளுக்கு மேல் எங்களின் நியமனத்தை உறுதிப்படுத்துமாறு எழுத்து மூலம் கோரியிருந்தோம். அதற்கு அவர் மத்திய அரசிடம் அனுமதி கோரி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் அவர் எடுத்ததாக தெரியவில்லை' எனவும் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனிஸ் மேலும் தெரிவித்தார்.