முனீரா அபூபக்கர்-
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய விடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் ”செம்ட்ட செவன” வேலைத் திட்டத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள 31 வீடுகளைக் கொண்ட “சங்ஹிதகம” மாதிரி வீடமைப்புத் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் அங்குரார்ப்பணம் செய்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
”செமட்ட செவன” வேலைத் திட்டத்தின் கீழ் காலஞ் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமக்கென ஒரு வீட்டில் வாழ்வதற்கான ஒரு உரிமையை அனைவரக்கும் பெற்றுக் கொடுக்கும் உன்னதமான “உதாகம கம்உதாவ” வீடமைப்பத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு நாடு பூராவும் செயற்படுத்தப்பட்டு வருவதுடன் அத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட மூன்றாவது மாதிரி விடமைப்புத் திட்டம் இதுவாகும்.
இம்மாதிரி வீடமைப்புத் திட்டத்தில் குறித்த பிரதேசத்தில் வாழும் வீடுகளற்ற மூவினங்களையும் சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணியும் இரண்டரை இலட்சம் ரூபா நிதி உதவியும் தேசிய விடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் மின்சாரம், குடிநீர், உள்ளக பாதைகள் உள்ளடங்கலாக பயனாளிகளினதும் பங்களிப்புடன் 7 தொடக்கம் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 31 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட இவ்வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதியமைச்சர் இந்திக பண்டார, மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியு. கே.கே.அத்துகோரள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைகளின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய உட்பட மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது 200 பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்,300 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் காணி சம்பந்தமாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடமாடும் சேவை, இலவச வைத்திய முகாம் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.