கஜரூபன்-
மஹிந்த ஆட்சியில் கொட்டமடித்த கடும் போக்கு இனவாத அமைப்புகள் இன்றைய நல்லாட்சிகாலத்திலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளமை கவலை தரும் விடயமாகும்" என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் கூறினார்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் கல்முனை சணச மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். "கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் உர மூட்டி வளர்க்கப்பட்ட கடும் போக்கு சிங்கள இனவாத அமைப்புகள் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு அச்சமூட்டும் வகையில் கொட்டமடித்து செயற்பட்ட வரலாற்றை எளிதில் மறந்து விடமுடியாது.
இத்தகைய அமைப்புகளின் கொட்டங்களை அடக்கவும் மஹிந்தவின் அராஜக ஆட்சியை ஒழிக்கவுமே ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக சிறுபான்மையின மக்கள் முழு மூச்சுடன் செயற்பட்டனர். சிறுபான்மையின மக்களின் ஒருமித்த ஆதரவு காரணமாக ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு வழிகோலப்பட்டதுடன் இன்றைய நல்லாட்சியும் மலர்ந்தது.
நல்லாட்சி மலர்ந்து சகல இன மக்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மீண்டும் இனவாத கடும் போக்கு பௌத்த அமைப்புகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கும் நல்லிணக்க முனைப்புகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய அமைப்புகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
சிறுபான்மைச் சமூகங்களை மீண்டும் அச்ச மூட்டி பேரினவாத அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கும் வகையிலான சமிக்ஞைகளை இந்த அமைப்புகள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.
இத்தகைய விஷமச் செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைக் கைது செய்ய வேண்டுமெனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கருத்துக்களும் வெளிவந்துள்ளன.
கடும் போக்கு இனவாத அமைப்புகளான பொதுபலசேனா, சிங்களராவய, ராவணாபலய எனும் அமைப்புகள் இத்தகைய விஷக்கருத்துக்களைக் கக்கியுள்ளன. நல்லாட்சியிலும் இத்தகைய கும்பல்களின் தலையெடுப்புக்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தும். எனவே நல்லாட்சி அரசு மீண்டும் மஹிந்த யுக இனவாதக்கொட்டங்கள் மேலோங்க இடமளிக்காது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்று முக்கிய காலகட்டத்தில் நாம் இருந்துவருகின்றோம். நல்லாட்சி அரசு அரசியலமைப்பு மாற்றத்தினூடாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் முனைப்பிலுள்ளது. இது சிறுபான்மைச் சமூகங்களுக்குக் கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு மட்டுமன்றி இறுதிச் சந்தர்ப்பமுமாகும்.
எனவே நாம் இச்சந்தர்ப்பத்தை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கு குறிப்பாக தமிழ்– முஸ்லிம் மக்களிடையேயான புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்புகளுடனான ஒற்றுமையும் அவசியமாகும்.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே அதிகாரப் பகிர்வின் முழுமையைத் தரும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் அறைகூவலை நம் இரு சமூகங்களும் முக்கிய கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.தவிரவும் வடக்கு மாகாண சபையின் அமைச்சுகளுக்கு ஆலோசனைச் சபைகளை ஸ்தாபிக்கும் விடயம் உதாசீனம் செய்யப்பட்டே வருகின்றது.
வடக்கு முதலமைச்சருடன் எமது தொழிற்சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட இதனை நாம் வலியுறுத்தினோம். பொது நிருவாக அமைச்சின் செயலாளர் கூட 10/2000 சுற்று நிருபத்தை அமுல்படுத்துமாறும் இது விடயத்தில் வலியுறுத்தியுள்ளார்" என்றார்.