முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பு அகற்றப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இராணுவ கமாண்டோக்கள் 35 பேர் உள்ளிட்ட ஐம்பது படைவீரர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரபுக்கள் பாதுகாப்பிற்கு இராணுவத்தின் உறுப்பினர்களை ஈடுபடுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையிலான தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு படையினர் பிரபுக்கள் பாதுகாப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரபுக்கள் எவருக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
விரைவில் கோத்தபாய ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.