பொத்துவிலில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. பொத்துவில் பிரதேசத்தில் 20 பாடசாலைகள் காணப்படும் அதே வேளையில் ஆரம்பக்கல்விகளை ஊட்டுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்கள் ஓரளவு நிறைவாக காணப்பட்ட பொழுதும் இடைநிலை கல்வியினை ஊட்டும் பாடசாலைகளில் தொடர் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடசாலையினை கொண்டு செல்வதில் அதிபர்கள் இடர்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அதே வேளையில் ஒரு சில பாடசாலைகள் மாணவர்களிடம் பணங்களை அறவிட்டு வெளியில் இருந்து சில ஆசிரியர்களை கொண்டு பாடசாலையினை நடாத்துவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்த அடிப்படையில் 2012 ஆண்டு பொத்துவில் உபவலயத்திற்கு 326 ஆசிரியர்கள் தேவையாக இருந்த பொழுதிலும் 245 ஆசிரியர்கள் அப்பொழுது சேவையில் ஈடுபட்டார்கள் 81 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் இடம் பெற்ற ஆசிரியர் இடமாற்றங்களில் 19 ஆசிரியர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்றார்கள். புதிய ஆசிரியர்களின் வருகையினை கழித்து பார்க்கின்ற பொழுது மேலும் 110 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவது ஆய்வு ரீதியாக புலப்படுத்தப்படுகின்றமை அவதானிக்கலாம்.
இந்த அடிப்படையில் இடைநிலை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணித் தரவுகளை எடுத்து நோக்குகின்ற பொழுது:
அல்கலாம் வித்தியாலயத்தில் 62 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 37 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். செங்காமம் அல்மினா வித்தியாலயத்தில் 14 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 08 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
பொத்துவில் முகப்பு என வர்ணிக்கப்படும் பொத்துவில் மத்திய கல்லூரியில் 64 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 44 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
அல் அக்சா வித்தியாலயத்தில் 24 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 16ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
அல்இர்பான் மகளிர் கல்லூரியில் 62 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 34 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் 23 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 16 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
அல்இஸ்ராக் வித்தியாலயத்தில் 44 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 24 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
அல்ஹிதாயா வித்தியாலயத்தில் 24 ஆசிரியர்கள் தேவையாகவுள்ள பொழுது 15 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
( இப்புள்ளி விபரம் அதிபர்களின் நேரடி உரையாடல்)
இப்பற்றாக்குறை தொடர்ந்து சென்றால் எதிர் நோக்கும் ஆபத்துக்கள் :
1. பொத்துவில் கல்வி வீழ்ச்சியின் பாதாளத்திற்குச் செல்லும்
2. அக்கரைப்பற்று வலயம் மாகாணத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்
3. கிழக்கு மாகாணம் இன்னும் ஏனைய மாகாணங்களை விட பின்தள்ளப்படும்
4. ஒழுக்கச் சீரற்ற சமூகம் உருவாகும்
5. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் தாக்கம் செலுத்தலாம்.
6. பொத்துவில் பாடசாலைகள் இழுத்து மூடப்படலாம்.
7. பிள்ளைகளின் கல்வி உரிமைகள் பாதிப்படையலாம்
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்?
1. அக்கறைப்பற்று வலயத்தின் ஆசிரியர் சமப்படுத்தலை ஒழுங்கு படுத்தல்.
2. அக்கறைப்பற்று வலயம் சுதந்திரமாக இயங்குவதற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கல்
3. பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை ஏற்படுத்தல்
4. அல்லது அதிகாரம் உள்ள உபவலயத்தை அமுலாக்கல்
5. அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியில் இருந்து வெளியாகும் பொத்துவில் மாணவர்களையாவது பயிற்சிக்காலத்தில் பொத்துவில் பாடசாலைக்கு நியமித்தல்.
6. இதர செயற்பாடுகள்
இன்னும் தொடரும்.....
எம்.ஏ. தாஜகான்
B.A. PGDE(merit),M.A.(Tamil), MED