இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது - றிப்கான் பதியுதீன்

லைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். 

தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் இது தொடர்பில் கூறியதாவது,

எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும் முற்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில், எவருக்கெதிராகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய எந்தப் பிரஜைக்கும் முடியும். அந்தவகையில் சிலரின் தூண்டுதலினால், தனிப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ள முறைப்பாட்டை விசாரிக்காமல், என்னை குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். 

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில், இதுவரை எந்தவொரு விசாரணைக்கும் நான் அழைக்கப்படவுமில்லை, முகம்கொடுக்கவுமில்லை. எனவே இவ்வாறான போலிப் பரப்புரைகளால், என்னைப் பழிவாங்க நினைக்கத் துடிக்கும் சிலருக்கு விரைவில் உண்மைகள் தெரியும். எனவே இவ்வாறான அபாண்டமான பழிகளை சுமத்த வேண்டாமென நான் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறு றிப்கான் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இணையத்தளங்களில் வெளியான செய்தி இதோ...

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரரும் வடமத்திய மாகாணசபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

தலைமன்னாரின் உப்புதிரவ் என்னும் இடத்தில் சுமார் 40 ஏக்கர் காணியை போலியான ஆவணங்களைத் தயாரித்த 240 லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்ததாக ரிப்கான் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலியான காணி உறுதியை தயாரித்து ரிப்கான் காணியை விற்பனை செய்ததாக, செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர், அண்மையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கிஹான் பிலபிட்டிய புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -