சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்துக்கு அருகில் அல் ஹிலால் தெற்கு வீதியில், அஹமட்லெப்பை முக்தார் (ஜஹான்) என்பவரது 516 ஆம் இலக்க வீட்டுக்கு, சேதம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கல்முனைப் பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிசார் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து குண்டை கைப்பற்றி அதனை செயலிழக்க செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான குறித்த வீட்டின் சொந்தக்காரர், இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடைய அமைச்சின் கீழ் உள்ள இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சருக்கான இணைப்பாளராகவும் செயற்படுகிறார்.
கடந்த தேர்தலின் போதும் குறித்த வீட்டின் மீது இனம் தெரியாதோரால் தாக்குதல் நடத்தப் பட்டிருந்ததும், கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் முன்னணி உறுப்பினராக இருந்து பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
2016-05-17 ஆம் திகதி நன்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.