தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.
ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நுகேகொடையில் இருக்கும் அவரது வீட்டின் கூரையில் இருந்த மரத்தடி ஒன்று உடைந்து அவரது தலையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது தலைப்பகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவரது தலையில் மரத்தடி விழுந்து காயம் ஏற்பட்டதைப் போலன்றி கனமான தடியொன்றில் பலமாகத் தாக்கியதன் காரணமாகவே காயம் ஏற்பட்டிருப்பதைப் போன்று காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த ராணுவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் சுமித் மானவடு ஆவார்.
மேஜர் ஜெனரல் மானவடு போர் இடம்பெற்ற காலத்தில் எறிகணைப் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.