அபு அலா -
வைத்தியசாலையையும், வைத்தியசாலையின் உடமைகளையும் பாதுகாக்கின்ற பொறுப்பு இப்பிரதேச மக்களாகிய உங்களுக்கே உரித்துடையது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மாந்தோட்ட பிரதேசத்தில் 1 கோடி 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட வைத்தியசாலையினை நேற்று மாலை (15) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் திறந்துவைத்த பின்னர் அங்கு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் இருந்த சுகாதார அமைச்சர் வேறு, வைத்தியர்கள் வேறு வைத்தியசாலையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் வேறு இவர்கள் மாறலாம் ஆனால் இப்பிரதேசத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை நீங்கள்தான் இந்த வைத்தியசாலையை பாதுகாக்கவேண்டும். இந்த வைத்தியசாலை நமது வைத்தியசாலை என்று இப்பிரதேசத்தில் வசிக்கின்ற ஒவ்வொருவரும் சிந்தித்து நடப்பவர்களாயின் இவ்வைத்தியசாலையின் உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும்.
இப்பிரதேசத்திலுள்ள மக்களின் பார்வை இவ்வைத்தியசாலையின் மீது இருக்குமாக இருந்தால் எதிர்வரும் காலங்களில் இந்த வைத்தியசாலையின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ச்சி கண்டு மாவட்ட வைத்தியசாலையாக இருக்கும் இந்த வைத்தியசாலை ஒரு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்வு பெற்று வைத்திய நிபுணர்களின் வைத்திய சேவைகளை செய்யும் வைத்தியசாலையாக தன்னகத்தே கொண்டுவிடும்.
அதுமாத்திரமல்லாமல், வைத்திய நிபுணர்களின் வைத்திய சேவைகளை பெறுவதற்காக இப்பிரதேச மக்கள் அம்பாறைக்கு சென்று அழைந்து தெரியவேண்டிய அவசியமும் ஏற்படாது. இதனை அடைவதற்கான முயற்சிகள் உங்களின் கைகளில்தான் உள்ளது என்றார்.
இதன்போது வைத்தியசாலைக்கு சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களையும் சுகாதார அமைச்சர் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.