அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 15 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை விதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் இன்னும் இருவாரங்களில் நிர்ணய விலை முறைமை அமுல்ப்படுத்தப்படும் என வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதைக்கு மொத்த விற்பனை விலை நிர்ணயத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்படி மூவாயிரம் அரச ஊழியர்களை களமிறக்கி சுற்றிவளைப்புகளை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் வாழ்க்கை செலவீனம் தொடர்பில் இன்று நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மேலும் குறிப்பிடுகையில்,
அத்தியாவசிய பொருட்கள் மீது வற் வரி ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வற் வரி அதிகரிக்கப்பட்டதாக தவறான பிரசாரம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில் குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு சலுகை மொத்த விற்பனையாளர்களினால் உரிய முறையில் வழங்கப்பட்டாலும் சில்லறை வியாபாரிகளினால் சலுகை உரிய முறையில் வழங்கப்படவில்லை.
இதன்பிரகாரம் நாட்டின் பல்வேறு பிரதேசத்தில் பலவிதமான விலை சூத்திரத்தின் பிரகாரம் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நுகர்வோரே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கொழும்பில் ஒரு விலையும் யாழ்ப்பாணத்தில் ஒருவிலையுமாக காணப்படுவதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் அன்றாட தேவைகளுக்கு பயண்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்கள் 15 க்கு நிர்ணய விலை விதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கபெற்றுள்ளது.