மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்நான் பொது பல சேனாக்காரனுமல்ல ராவணபலயக்காரனுமல்ல முஸ்லிம்களுக்கு அநீதி இடம் பெற்றால் அதையும் தட்டிக்கேட்பேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்தவிகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்தவிகாரையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் நான் பொது பல சேனாக்காரனுமல்ல ராவணபலயக்காரனுமல்ல. நான் ஜாதிக ஹெலஉறுமயுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி காரனுமல்ல. சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்காரனுமல்ல. முஸ்லிம்களுக்கு அநீதி இடம் பெற்றால் அதையும் தட்டிக்கேட்பேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்கோ அதே போன்று சிங்கள மக்களுக்கோ அநீதி இடம் பெறுமானால் அதனை வீதிக்கு இறங்கித் தட்டிக்கேட்பவன் நான்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு பௌத்த விகாரையை புறக்கணித்துள்ளமை கவலையடையச் செய்கின்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர் மட்டக்களப்புக்கு மூன்று தடவைகள் வருகை தந்தும் மட்டக்களப்பு பௌத்த விகாரைக்கு வருகை தராமல் மட்டக்களப்பு மங்களராமய பௌத்தவிகாரையை புறக்கணித்துச் சென்றுள்ளார்.
இது பெரிதும் கவலையளிப்பதுடன் கிழக்கு மாகாண பௌத்தர்களையும் வேதனையடையச் செய்துள்ளது. மல்வத்தை மற்றும் கண்டி அஸ்கிரிய மற்றும் களனி போன்ற விகாரைகளுக்கு அழைக்காமலே செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் அழைத்தும் மட்டக்களப்பு மங்களராமய பௌத்தவிகாரைக்கு வருகை தரவில்லை.
கடந்த 2015ம் அண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையில் ஜனாதிபதி சதஹம் யாத்ரா எனப்படும் 9வது தர்ம உரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இறுதிக் கட்டத்தில் அன்று நிலவிய மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஜனாதிபதியின் விஜயம் இறுதி நேரத்தில் ரத்தானது.
அந்த நிகழ்வில் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர் ரோசிரியர் பிரமணாவத்தை சீவலி அனுநாயக்க தேரர் உரையாற்றினார். இந்த நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ள வில்லை. இதை விடவும் ஜனாதிபதி மூன்று தடவைகள் மட்டக்களப்புக்கு வருகை தந்தார். ஆனால் அந்த விஜயங்களின் போது அவர் மட்டக்களப்பு பௌத்த விகாரைக்கு வரவே இல்லை.
கடைசியாக கடந்த 10.7.2016 ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது மட்டக்களப்பு வெபர் மைதான திறப்பு விழா வைபவத்தில் வைத்து மட்டக்களப்பு மங்களராமய பௌத்தவிகாரைக்கு ஒரு நிமிடமாவது வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்தேன்.
தனக்கு நேரமில்லை எனக் கூறி எனது அழைப்பை புறக்கணித்து மட்டக்களப்பு மங்களராமய பௌத்தவிகாரைக்கு வருகை தராமல் சென்றார். அவர் அந்த வைபவத்தின் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு செல்வதற்கும் நேரமிருந்தது. ஆனால் மட்டக்களப்பிலுள்ள பௌத்த விகாரைக்கு செல்வதற்குத்தான் நேரமிருக்க வில்லை.
ஜனாதிபதியின் இந்தப் புறக்கணிப்பு கிழக்கு மாகாண பௌத்த மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளதுடன் கவலையடையவும் செய்துள்ளது.
ஜனாதிபதி ஏறாவூருக்கு ஆடைத்தொழிற்சாலை திறக்கச் சென்றார். அப்போது அங்குள்ள பௌத்த விகாரைக்கும் செல்ல வில்லை.மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்தவிகாரையில் கடந்த 22 வருடங்களாக நான் கடமையாற்றுகின்றேன். யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் இயக்கங்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எனது உயிரை பணயம் வைத்து பாரிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடமையாற்றியுள்ளேன்.
யுத்தத்தின் போது எனது கையில் பல இராணுவ வீரர்களின் உயிர்கள் பிரிந்துள்ளன. இவ்வளவு கடினமான காலத்தில் கடமையாற்றி பல சவால்களுக்கு முகம் கொடுத்து ஐக்கியத்தை நிலைநாட்ட பாடுபட்டுள்ளேன்.
இன்று சிறப்பாக இருக்கும் மட்டக்களப்பு மங்களராமய பௌத்தவிகாரைக்கு ஜனாதிபதி விஜயம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் விஜயம் செய்யாமல் புறக்கணித்தார். ஜனாதிபதியின் எந்தப்பங்களிப்புமில்லாமல் எமது விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்தின் நினைவுக்கல்லில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் வருகை தராமல் புறக்கணித்ததால் அவரின் பெயர் அதில் தேவையில்லை என்பதாலேயே அந்த நினைவுக்கல்லையும் உடைத்தேன் இனிமேல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தருவதாயின் எமது மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்தவிகாரைக்கு வருகை தந்துவிட்டே மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். அவர் ஒரு பௌத்தன் என்பதால் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்: விடிவெள்ளி