அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு ஆகிய பிரதேசங்களில் குப்பைகள் அகற்றும் செயற்றிட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேற்படி பிரதேசங்களை சேர்ந்த பொது மக்களை அறிவுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்புதிய நடைமுறைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"வழமையான குப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மேலதிகமாக வாரத்தில் ஒரு நாள், இலைக்கழிவுகளையும் சமையலறையில் உக்கக்கூடிய கழிவுகளையும் மாத்திரம் சேகரித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் தமது வீடுகளில் சேரும் கழிவுகளில் இருந்து இத்தகைய கழிவுகளை மாத்திரம் வேறுபடுத்தி மாநகர சபை திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அதேவேளை வீடுகளில் சேரும் வெற்றுப் போத்தல்கள், தகர டப்பாக்கள், சிரட்டை, காட்போட் மற்றும் பிளாஸ்ட்ரிக் பொருட்கள் போன்ற மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை மருதமுனை பொது மையவாடிக்கு அருகாமையில் அமைந்துள்ள மீள் சுழற்சி நிலையத்தில் நேரடியாக பொறுப்பேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதனால் இவ்வகையான கழிவுகளை நன்கு சுத்தப்படுத்திய பின்னர் குறித்த நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த இரண்டு வகையான ஏற்பாடுகளுக்கும் புறம்பாக, உக்கக்கூடிய கழிவுகள், மீள் சுழற்சிக்கான கழிவுகள் என்பவற்றை வெவ்வேறாக பொதி செய்து, பெரிய நீலாவணையில் அமைந்துள்ள சேதனப் பசளை நிலையத்தில் நேரடியாக ஒப்படைக்க முடியும்.
இவ்வாறு தரம் பிரிக்கப்படாத எல்லா வகையான குப்பைகளும் ஒன்றுசேர்ந்த பொதிகள் இந்நிலையங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பொறுப்பேற்கப்பட மாட்டாது என கண்டிப்பாக அறிவுறுத்துகின்றோம்..
ஆகையினால் மேற்படி பிரதேசங்களை சேர்ந்த பொது மக்கள் இப்புதிய நடைமுறைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் திண்மக் கழிவகற்றல் பிரச்சனைகளை கணிசமானளவு தீர்க்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்" என்று குறிப்பிட்டார்