என்.எம்.அப்துல்லாஹ்-
யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தின் ஜே86 பிரிவில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய அ.அஸ்மின் அவர்கள் இன்று நேரில் ஆராய்ந்தார்.
குறித்த பிரிவில் 35 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன; எனினும் வீட்டுத்திட்டங்களை அமுலாக்குவதில் இதுவரை திருப்த்திகரமான நிலைமை எட்டப்படவில்லை என உயர் அதிகாரிகள் குறைகூறுகின்றார்கள் இதனை நேரடியாக கண்டுகொள்வதற்காகவே தான் இன்று இங்கு வந்திருப்பதாக உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்கள், வீட்டுத்திட்டங்களுக்கான வரைபடங்கள், வீட்டுத்திட்டங்களுக்கான யாழ் மாநகரசபை அனுமதி, மற்றும் போதிய மேசன் மற்றும் தொழிலாளிகள் இன்மை போன்ற காரணங்களையும், தம்மிடம் ஆரம்பக் கட்ட வேலைகளுக்கான நிதி இல்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.
அங்கு கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் அவர்கள்; வீட்டுத்திட்டம் தேவை என்றுதான் எல்லோரும் கேட்டீர்கள், நாங்களும் மேல் மட்டங்களோடு கலந்துரையாடி ஒரு கணிசமான தொகை வீடுகளை எமது மக்களுக்கு கிடைக்க வழிசெய்திருக்கின்றோம். இப்போது அவற்றைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடம்தான் இருக்கின்றது, நீங்கள் துரிதமாக முடித்தால் மாத்திரமே அடுத்த கட்டத்தில் இன்னும் கணிசமானவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும்; இன்னும் பலர் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்காது இருக்கின்றார்கள், இவர்களை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துங்கள். என்றும் தெரிவித்தார்.
மக்கள் முன்வைத்த ஒரு சில பிரச்சினைகளுக்கு உயர் அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளும் அவ்விடத்திலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டன. அடுத்து காமால் வீதிக்கான தெருவிளக்குகள் அமைக்கின்ற விடயம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நிர்மானிக்கப்பட்டுவரும் கதீஜா பெண்கள் கல்லூரிக்கான 3 ஆசிரியர் விடுதித்தொகுதியும் பார்வையிடப்பட்டது. அங்கு தற்காலிகமாக குடியிருந்த 11 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு தலா 165,000.00 ரூபா பெறுமதியான தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன, அதனையும் மாகாணசபை உறுப்பினர் அவர்கள் பாரவியிட்டு மேலதிகமான தேவைகள் குறித்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ஜே 86 பிரிவின் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் மக்கள் தமது நன்றியறிதல்களை முன்வைத்ததோடு; மேலதிகள் தேவைகள் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.