பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மாணவர்களையும் நாட்டையும் பற்றிச் சிந்திக்காது பணம் உழைக்கும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
காலி கத்தலுவ மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (27) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கல்லூரியின் புதிய தொழில்நுட்ப பீடம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் சந்திம வீரக்கொடி, சந்திரலால் அபே குணவர்தன, விஜயபால ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட அதிதிகள், கல்லூரி அதிபர், ஆசிரியர் குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.