கிழக்கு மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை ஒதுக்கி விட்டு உலமா கட்சி கூட்டிணைந்துள்ள அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைமையை பலப்படுத்தி அதற்கொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சித்தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இந்த பதினாறு வருடங்களுள் கிழக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அதற்கு வெளியில் உள்ள மக்களுக்கும் பெரிதாய் எதையும் சாதிக்கவிலலை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்கு அக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களே சாட்சியாகும். முஸ்லிம் காங்கிரசின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என சொல்லும் நீங்கள் அ இ மக்கள் காங்கிரசின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என ஏன் கேட்பதில்லை என சிலர் எம்மை கேட்கின்றனர்.
முதலில் இவர்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மு காவின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என்பது உலமா கட்சியின் கோரிக்கை அல்ல. மாறாக கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை விற்று பிழைக்கும் முஸ்லிம் காங்கிரசை கிழக்கு மக்கள் குப்பையில் தூக்கி போட வேண்டும் என்றே உலமா கட்சி சொல்லி வருகிறது.
ஆனாலும் கிழக்கு மக்கள் தமது கிழக்கை தலைமையாகவும், தளமாகவும் கொண்ட கட்சியை பலப்படுத்தி அந்தக்கட்சி தேசிய தலைமைகளுடன் இணைந்து கூட்டாக செல்வதன் மூலம் மட்டுமே கிழக்குக்கான விசேட சலுகைகள், உரிமைகள் போன்ற அரசியல் வெற்றிகளை பெற முடியும் என்பதே எமது கட்சிக்கொள்கையாகும். இந்த உண்மையின் ஒரு பக்க உணர்வே கிழக்கின் எழுச்சியாகும்.
மேலும் கிழக்கு மக்களுக்கு மட்டும் ஒரு கட்சி தேவை என்பதோ, முஸ்லிம்களின் தலைவர் கிழக்கை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றோ நாம் சொல்வதில்லை. ஆனால் கிழக்குக்கு வெளியிலான அரசியல் தலைமகள் எவரும் கிழக்கு முஸ்லிம்களின் தனியான உரிமைகள் விடயத்தில் இது வரை கவனம் செலுத்தவுமில்லை, எதையும் பெற்றுத்தரவுமில்லை என்பதே எமது குற்றச்சாட்டு. இதனை ஹக்கீமின் பதினாறு வருட தலைமை மிகப்பெரிய உதாரணமாகும்.
ஆனாலும் அ இ மக்கள் காங்கிரஸ் இன்னமும் பெரும்பான்மையான கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை பெறாத நிலையிலும் கிழக்கு மக்கள் விடயத்தில் அதிக கரிசணயுடன் செயற்படுவதை நாம் காண்கிறோம். அ இ ம காங்கிரஸ், கிழக்கில் முஸ்லிம் காங்கிரசை விட அதிக வாக்குகள் பெற்று அதன் பின் தற்போது மு கா, கிழக்கு மக்களை ஓரங்கட்டுவது போல் நடந்து கொண்டால் நிச்சயம் நாம் அ இ ம கா தலைமைக்கெதிராக பேசவும் தயங்க மாட்டோம். இருந்த போதும் இந்த நாட்டில் கிழக்கு அல்லது வடக்கை சேர்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளே வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காகவும் ஏனைய மாகாண முஸ்லிம்களுக்காகவும் பாடுபடுகிறது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இந்த வகையில் அமைச்சர் அஷ்ரபுக்குப்பின் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிறந்த தேசிய தலைமையாக காண்கிறோம். அதே போல் கிழக்கை தளமாகவும், தலைமையாகவும் கொண்ட உலமா கட்சி தேசிய அளவில் முஸ்லிம்களின் உரிமை குரலாக தனித்தும் கூட்டிணைந்தும் செயற்படுகிறது என்பதை முழு முஸ்லிம் சமூகமும் அறியும்.