அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - அபயபுர பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கெப் வண்டி மோதியதில் நேற்றிரவு (10) முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை -உவர்மலை -லோவர் வீதியில் வசிக்கும் ஆர்.சுந்தரலிங்கம் (59 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - கண்டி பிரதான வீதியினூடாக வேகமாக வந்த கெப் வாகனம் அன்புவெளி புரம் பகுதியிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.