பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட அலுவலகமொன்று நிறுவப்படவுள்ளது. சுயாதீன அதிகாரி ஒருவரின் கீழ் இந்த வரவு செலவுத் திட்ட அலுவலகம் இயங்க உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் நிதி விவகாரங்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதே இந்த அலுவலகத்தின் பிரதான பணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளை நடத்துதல் அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடாத்துதல் போன்ற பணிகள் இந்த அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. குறிப்பாக வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர்களுக்கும் அந்தந்த மாகாணங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் எழும் பிரச்சினைகளின் போது இந்த அலுவலகம் ஆலோசனைகளை வழங்கவுள்ளது.
ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திற்கும் முன்னதாக நாடாளுமன்றிற்கு விசேட அறிக்கை சமர்ப்பிக்கும் பணியும் இந்த அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. புதிய அலுவலகத்திற்கான அதிகாரிகள் தெரிவின் பின்னர் அலுவலகத்தை நிறுவும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.