பண்டாரநாயக்கவின் சமாதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான கூட்டு எதிரணியினால் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரையின் போது, அத்தனகல பகுதியில் வைத்து சமாதி மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் குறிப்பிடுகையில், ‘2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரண குணவர்தனவும், பிரியந்த புஸ்பகுமாரவும், பண்டாரநாயக்கவின் சமாதிக்கு கல் எறிந்தனர். அதற்கு எதிராக எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அத்தனகல ஊடாக செல்லவுள்ள அந்த பேரணியை, அன்று சமாதிக்கு கல் எறிந்தவர்களே ஏற்பாடு செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் இருவரும் மீண்டும் சமாதிக்கு கல் எறிவார்கள் என்றும் அறியக் கிடைக்கின்றது.
எனவே சமாதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளேன். இதனால் சமாதியின் பாதுகாப்பிற்காக தற்போது விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எவருக்கும் அங்கு பிரவேசிக்க முடியாது’ என்றும் கூறினார்.