பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை இடைநிறுத்த முடிவு? என்கின்ற செய்தி வெறும் வதந்தி மாகாண சபை உறுப்பினர் முஹம்மது றயீஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஊடகங்கள் சில வட மாகாண சபை உறுப்பினர் முஹம்மது றயீஸை கட்சி தலைமைப்பீடம் இடைநிறுத்த முடிவு செய்திருப்பதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியின் உண்மை தன்மை தொடர்பாக அறிந்து கொள்ள தொலைபேசி வாயிலாக கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரை தொடர்பு கொண்ட போது அச்செய்தியை மறுத்துள்ளனர்.
தவிர இவ்வாறான செய்தி அரசியல் வங்குரோத்து அடைந்து வரும் ஒரு சிலரால் கட்டிவிடப்பட்ட வதந்தி எனவும் ,கட்சியின் நிலைப்பாடு குறித்து தவறான கண்ணோட்டத்தை பரப்பி கட்சியின் வளர்ச்சியை தடுக்க முயல்வதாகம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் முஹம்மது றயீஸ் கருத்து தெரிவிக்கையில்
எங்கள் கட்சி வன்னியில் தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் என்னை கட்சி இடைநிறுத்தியதாக பொய் பிரச்சாரங்களை விடுகின்றனர். அது அவர்களின் இயலாமையை காட்டுகின்றது. எந்த தடை வந்தாலும் எனக்கு வாக்களித்த மக்களிற்கு எனது சேவையை இயன்றளவு செய்வேன். நேற்று கூட மக்களிற்கு தேவையான விடயங்களை தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தேன். எனவே தான் இந்த வங்குரோத்து செய்தி வெறும் வதந்தி என மக்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன். என கூறினார்.
இதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் திட்டமிடப்பட்டு சிலரால் அண்மைக்காலமாக வதந்திகள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.