ஏ.எச்.சித்தீக் காரியப்பர் (சிரேஸ்ட ஊடகவியலாளர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான (அதிகாரமற்ற) ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் படித்தேன்.
இது தொடர்பில் அவரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசினேன். இதன் உண்மைத்தன்மையை விளக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் அளித்த பதில்
” நான் இந்தியாவிலிருந்து நேற்றுத்தான் (25) வந்தேன். இந்த விடயம் தொடர்பில் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் பலரும் என்னைத் தொடர்பு கொண்ட கேட்டனர். எது எப்படியிருப்பினும் அனைத்து விடயத்துக்கும் முன்னராக எனது பதவி அதிகாரக் குறைப்பு தொடர்பில் முதலில் எனக்கு நிவாரணம் தேவை. எனது செயலாளர் நாயகம் பதவிக்குரிய அதிகாரங்கள் மீண்டும் தரப்பட்டு பழைய நிலையில் நான் செயற்பட வேண்டும். அதற்குப் பின்னரே மற்றையவை என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நான் , நீங்கள் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியிருந்தீர்கள். இந்த விடயம் உண்மையாகவிருந்தால் அது எதிர்காலத்தில் பூதாகரமாக வெளிவந்து விடக் கூடாது என்பதற்காக தலைவர் உங்களுக்கு தேசியப் பட்டியல் எம்.பி பதவியைத் தர முன்வந்துள்ளாரோ தெரியாது எனக் கூறினார்.
இதற்கு ஹஸன் அலி அளித்த பதில் என்னை தூக்கிவாரிப் போட்டு விட்டது. அமைசச்ர் ஹக்கீம் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்தார் என்று நான் ஒரு போதும் கூறவில்லையே? வேறு சிலரே ஹக்கீம் மீது இவ்வாறு குற்றம் சுமத்துகிறார்கள் என்றுதான் நான் கூறினேன். என்றார்.
ஆக, மொத்தத்தில் ஹஸன் அலி விரைவில் தேசியப் பட்டியல் எம்.பியாகிறார் என்று நம்பலாம் அல்லவா, அப்படித்தானே?